12.530 கழற்சிங்க நாயனார் புராணம் ( ) |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12.530  
கழற்சிங்க நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார் கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்ய அடிமலர் அன்றி வேறொன் றறிவினில் குறியா நீர்மைக் கொடிநெடுந் தானை மன்னர் கோக்கழற் சிங்கர் என்பார்.
| [1] |
காடவர் குரிசி லாராம் கழற்பெருஞ் சிங்க னார்தாம் ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று கூடலர் முனைகள் சாய வடபுலங் கவர்ந்து கொண்டு நாடற நெறியில் வைக நன்னெறி வளர்க்கும் நாளில்.
| [2] |
குவலயத் தரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று தவலரும் அன்பில் தாழ்ந்து தக்கமெய்த் தொண்டு செய்வார் சிவபுரி என்ன மன்னும் தென்திரு வாருர் எய்திப் பவமறுத் தாட்கொள் வார்தங் கோயிலுள் பணியப் புக்கார்.
| [3] |
அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயி லுள்ளால் முரசுடைத் தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் விரைசெறி மலர்மென் கூந்தல் உரிமைமெல் லியலார் தம்முள் உரைசிறந் துயர்ந்த பட்டத் தொருதனித் தேவி மேவி.
| [4] |
கோயிலை வலங்கொண்டு அங்கண் குலவிய பெருமை யெல்லாம் சாயல்மா மயிலே போல்வாள் தனித்தனி கண்டு வந்து தூயமென் பள்ளித் தாமம் தொடுக்குமண் டபத்தின் பாங்கர் மேயதோர் புதுப்பூ அங்கு விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.
| [5] |
புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர் இதுமலர் திருமுற் றத்துள் எடுத்துமோந் தனளாம் என்று கதுமென ஓடிச் சென்று கருவிகைக் கொண்டு பற்றி மதுமலர்த் திருவொப் பாள்தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.
| [6] |
வார்ந்திழி குருதி சோர மலர்க்கருங் குழலும் சோரச் சோர்ந்துவீழ்ந் தரற்றுந் தோகை மயிலெனத் துளங்கி மண்ணில் சேர்ந்தயர்ந் துரிமைத் தேவி புலம்பிடச் செம்பொன் புற்றுள் ஆர்ந்தபே ரொளியைக் கும்பிட்டு அரசரும் அணையவந்தார்.
| [7] |
வந்தணை வுற்ற மன்னர் மலர்ந்தகற் பகத்தின் வாசப் பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று பார்மிசை வீழ்ந்த தென்ன நொந்தழிந் தரற்று வாளை நோக்கிஇவ் வண்டத் துள்ளோர் இந்தவெவ் வினையஞ் சாதே யார்செய்தார் என்னும் எல்லை.
| [8] |
அந்நிலை யணைய வந்து செருத்துணை யாராம் அன்பர் முன்னுறு நிலைமை யங்குப் புகுந்தது மொழிந்த போது மன்னரும் அவரை நோக்கி மற்றிதற் குற்ற தண்டம் தன்னைஅவ் வடைவே யன்றோ தடிந்திடத் தகுவ தென்று.
| [9] |
கட்டிய வுடைவாள் தன்னை உருவிஅக் கமழ்வா சப்பூத் தொட்டு முன்னெடுத்த கையாம் முற்படத் துணிப்ப தென்று பட்டமும் அணிந்து காதல் பயில்பெருந் தேவி யான மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தா ரன்றே.
| [10] |
ஒருதனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போது பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க இருவிசும் படைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி மருவிய தெய்வ வாச மலர்மழை பொழிந்த தன்றே.
| [11] |
அரியஅத் திருத்தொண் டாற்றும் அரசனார் அளவில் காலம் மருவிய வுரிமை தாங்கி மாலயற் கரியார் மன்னும் திருவருட் சிறப்பி னாலே செய்யசே வடியி னீழல் பெருகிய வுரிமை யாகும் பேரருள் எய்தி னாரே.
| [12] |
வையகம் நிகழக் காதல் மாதேவி தனது செய்ய கையினைத் தடிந்த சிங்கர் கழலிணை தொழுது போற்றி எய்திய பெருமை அன்பர் இடங்கழி யார்என் றேத்தும் மெய்யரு ளுடைய தொண்டர் செய்வினை விளம்ப லுற்றாம்.
| [13] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12.540  
இடங்கழி நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எழுந்திரைமா கடலாடை இருநிலமாம் மகள்மார்பில் அழுந்துபட எழுதும்இலைத் தொழில்தொய்யில் அணியினவாம் செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின் கொழுந்துணர்கோ திக்கொண்டு குயில்நாடுங் கோனாடு.
| [1] |
முருகுறுசெங் கமலமது மலர்துதைந்த மொய்யளிகள் பருகுறுதெண் திரைவாவிப் பயில்பெடையோடு இரையருந்தி வருகுறுதண்து ளிவாடை மறையமா தவிச்சூழல் குருகுறங்குங் கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர்.
| [2] |
அந் நகரத் தினில்இருக்கு வேளிர்குலத் தரசளித்து மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டில் பாக்கொங்கில் பன்னுதுலைப் பசும்பொன்னால் பயில்பிழம்பாம் மிசையணிந்த பொன்னெடுந்தோள் ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்.
| [3] |
இடங்கழியார் எனவுலகில் ஏறுபெரு நாமத்தார் அடங்கலர்முப் புரமெரித்தார் அடித்தொண்டின் நெறியன்றி முடங்குநெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும் தொடர்ந்தபெருங் காதலினால் தொண்டர்வேண் டியசெய்வார்.
| [4] |
சைவநெறி வைதிகத்தின் தருமநெறி யொடுந்தழைப்ப மைவளருந் திருமிடற்றார் மன்னியகோ யில்களெங்கும் மெய்வழிபாட்டு அர்ச்சனைகள் விதிவழிமேன் மேல்விளங்க மொய்வளர்வண் புகழ்பெருக முறைபுரியும் அந்நாளில்.
| [5] |
சங்கரன்தன்அடி யாருக்கு அமுதளிக்கும் தவமுடையார் அங்கொருவர் அடியவருக்கு அமுதொருநாள் ஆக்கவுடன் எங்குமொரு செயல்காணாது எய்தியசெய் தொழின்முட்டப் பொங்கியெழும் பெருவிருப்பாற்
| [6] |
அரசரவர் பண்டாரத் தந்நாட்டின் நெற்கூட்டில் நிரைசெறிந்த புரிபலவா நிலைக்கொட்ட காரத்தில் புரைசெறிநள் ளிருளின்கண் புக்குமுகந்து எடுப்பவரை முரசெறிகா வலர்கண்டு பிடித்தரசன் முன்கொணர்ந்தார்.
| [7] |
மெய்த்தவரைக் கண்டிருக்கும் வேல்மன்னர் வினவுதலும் அத்தன்அடி யாரையான் அமுதுசெய்விப் பதுமுட்ட இத்தகைமை செய்தேனென்று இயம்புதலு மிகவிரங்கிப் பத்தரைவிட்டு இவரன்றோ பண்டாரம் எனக்கென்பார்.
| [8] |
நிறையழிந்த வுள்ளத்தால் நெற்பண்டா ரமும்அன்றிக் குறைவில்நிதிப் பண்டார மானவெலாங் கொள்ளைமுகந் திறைவனடி யார்கவர்ந்து கொள்கவென எம்மருங்கும் பறையறையப் பண்ணுவித்தார் படைத்தநிதிப் பயன்கொள்வார்.
| [9] |
எண்ணில்பெரும் பண்டாரம் ஈசனடி யார்கொள்ள உண்ணிறைந்த அன்பினால் உறுகொள்ளை மிகவூட்டித் தண்ணளியால் நெடுங்காலந் திருநீற்றின் நெறிதழைப்ப மண்ணில்அருள் புரிந்திறைவர் மலரடியின் நிழல்சேர்ந்தார்.
| [10] |
மைதழையும் மணிமிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில் எய்துபெருஞ் சிறப்புடைய இடங்கழியார் கழல்வணங்கி மெய்தருவார் நெறியன்றி வேறொன்றும் மேலறியாச் செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம்.
| [11] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12.550  
செருத்துணை நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம் வழுவா ஒருமைநெறி கொள்ளும் இயல்பிற் குடிமுதலோர் மலிந்த செல்வக் குலப்பதியாம் தெள்ளுந் திரைகள் மதகுதொறும் சேலும் கயலும் செழுமணியும் தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.
| [1] |
சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடிமுதல்வர் நீரின் மலிந்த செய்யசடை நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த வேரி மலர்ந்த பூங்கழல்சூழ் மெய்யன் புடைய சைவரெனப் பாரில் நிகழ்ந்த செருத்துணையார் பரவுந் தொண்டின் நெறிநின்றார்.
| [2] |
ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித் தகர்கோயில் ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலஞ்சேர் முன்றிலினுள் மான நிலவு திருப்பணிகள் செய்து காலங் களின்வணங்கிக் கூனல் இளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவுநாள்.
| [3] |
உலகு நிகழ்ந்த பல்லவர்கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்ததொரு மலரை யெடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித்தொண்டர் இலகு சுடர்வாய்க் கருவியெடுத் தெழுந்த வேகத் தாலெய்தி.
| [4] |
கடிது முட்டி மற்றவள்தன் கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப் படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் பரமர் செய்யசடை முடியில் ஏறுந் திருப்பூமண் டபத்து மலர்மோந் திடும்மூக்கைத் தடிவ னென்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.
| [5] |
அடுத்த திருத்தொண் டுலகறியச் செய்த அடலே றனையவர்தாம் தொடுத்த தாம மலரிதழி முடியார் அடிமைத் தொண்டுகடல் உடுத்த உலகின் நிகழச்செய் துய்யச் செய்ய பொன்மன்றுள் எடுத்த பாத நிழலடைந்தே இறவா வின்பம் எய்தினார்.
| [6] |
செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள் ளித்தாமம் அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமைப் பெருந்தேவி துங்க மணிமூக் கரிந்தசெருத் துணையார் தூய கழல்இறைஞ்சி எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை யெடுத்துரைப்பாம்.
| [7] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12.560  
புகழ்த்துணை நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
செருவிலிபுத் தூர்மன்னும் சிவமறையோர் திருக்குலத்தார் அருவரைவில் ஆளிதனக்கு அகத்தடிமை யாம்அதனுக்கு ஒருவர்தமை நிகரில்லார் உலகத்துப் பரந்தோங்கிப் பொருவரிய புகழ்நீடு புகழ்த்துணையார் எனும்பெயரார்.
| [1] |
தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுநாள் பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசிபுரிந்தும் எங்கோமான் தனைவிடுவேன் அல்லேன்என் றுஇராப்பகலும் கொங்கார்பன் மலர்கொண்டு குளிர்புனல்கொண்டு அருச்சிப்பார்.
| [2] |
மாலயனுக் கரியானை மஞ்சனமாட் டும்பொழுது சாலவுறு பசிப்பிணியால் வருந்திநிலை தளர்வெய்திக் கோலநிறை புனல்தாங்கு குடந்தாங்க மாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்தயர்வார்.
| [3] |
சங்கரன்றன் அருளாலோர் துயில்வந்து தமையடைய அங்கணனுங் கனவின்கண் அருள்புரிவான் அருந்துணவு மங்கியநாட் கழிவளவும் வைப்பதுநித் தமும்மொருகா சிங்குனக்கு நாமென்ன இடர்நீங்கி யெழுந்திருந்தார்.
| [4] |
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்புடன் உவந்து முற்றுணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களி கூர்ந்தார்.
| [5] |
அந்நாள்போல் எந்நாளும் அளித்தகா சதுகொண்டே இன்னாத பசிப்பிணிவந் திறுத்தநாள் நீங்கியபின் மின்னார்செஞ் சடையார்க்கு மெய்யடிமைத் தொழில்செய்து பொன்னாட்டில் அமரர்தொழப் புனிதர்அடி நிழற்சேர்ந்தார்.
| [6] |
பந்தணையும் மெல்விரலாள் பாகத்தர் திருப்பாதம் வந்தணையும் மனத்துணையார் புகழ்த்துணையார் கழல்வாழ்த்திச் சந்தணியும் மணிப்புயத்துத் தனிவீர ராந்தலைவர் கொந்தணையும் மலர்அலங்கல் கோட்புலியார் செயல்உரைப்பாம்.
| [7] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12.570  
கோட்புலி நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நலம்பெருகுஞ் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண் குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியார் எனும்பெயரார் தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியா ராய்வேற்றுப் புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப் புகழ்விளைப்பார்.
| [1] |
மன்னவன்பால் பெறுஞ்சிறப்பின் வளமெல்லாம் மதிஅணியும் பிஞ்ஞகர்தங் கோயில்தொறுந் திருவமுதின் படிபெருகச் செந்நெல்மலைக் குவடாகச் செய்துவருந் திருப்பணியே பன்னெடுநாள் செய்தொழுகும் பாங்குபுரிந்து ஓங்குநாள்.
| [2] |
வேந்தன் ஏவலிற்பகைஞர் வெம்முனைமேற் செல்கின்றார் பாந்தள்பூண் எனஅணிந்தார் தமக்கமுது படியாக ஏந்தலார் தாம்எய்தும் அளவும்வேண் டும்செந்நெல் வாய்ந்தகூடு அவைகட்டி வழிக்கொள்வார் மொழிகின்றார்.
| [3] |
தந்தமர்கள் ஆயினார் தமக்கெல்லாந் தனித்தனியே எந்தையார்க் கமுதுபடிக்கு ஏற்றியநெல் இவையழிக்கச் சிந்தையால் தாம்நினைவார் திருவிரையாக் கலியென்று வந்தனையால் உரைத்தகன்றார் மன்னவன்மாற் றார்முனைமேல்.
| [4] |
மற்றவர்தாம் போயினபின் சிலநாளில் வற்காலம் உற்றலும்அச் சுற்றத்தார் உணவின்றி இறப்பதனில் பெற்றமுயர்த் தவர்அமுது படிகொண்டா கிலும்பிழைத்துக் குற்றமறப் பின்கொடுப்போம் எனக்கூடு குலைத்தழிந்தார்.
| [5] |
மன்னவன்தன் தெம்முனையில் வினைவாய்த்து மற்றவன்பால் நன்னிதியின் குவைபெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர் அந்நகரில் தமர்செய்த பிழையறிந்த தறியாமே துன்னினார் சுற்றமெலாம் துணிப்பனெனுந் துணிவினராய்.
| [6] |
எதிர்கொண்ட தமர்க்கெல்லாம் இனியமொழி பலமொழிந்து மதிதங்கு சுடர்மணிமா ளிகையின்கண் வந்தணைந்து பதிகொண்ட சுற்றத்தார்க் கெல்லாம்பைந் துகில்நிதியம் அதிகந்தந் தளிப்பதனுக் கழைமின்கள் என்றுரைத்தார்.
| [7] |
எல்லோரும் புகுந்ததற்பின் இருநிதியம் அளிப்பார்போல் நல்லார்தம் பேரோன்முன் கடைகாக்க நாதன்தன் வல்லாணை மறுத்தமுது படியழித்த மறக்கிளையைக் கொல்லாதே விடுவேனோ எனக்கனன்று கொலைபுரிவார்.
| [8] |
தந்தையார் தாயார்மற் றுடன்பிறந்தார் தாரங்கள் பந்தமார் சுற்றத்தார் பதியடியார் மதியணியும் எந்தையார் திருப்படிமற்று உண்ணவிசைந் தார்களையும் சிந்தவாள் கொடுதுணித்தார் தீவினையின்பயன் துணிப்பார்.
| [9] |
பின்னங்குப் பிழைத்ததொரு பிள்ளையைத்தம் பெயரோன்அவ் அன்னந்துய்த் திலதுகுடிக் கொருபுதல்வ னருளுமென இந்நெல்லுண் டாள்முலைப்பால் உண்டதுஎன எடுத்தெறிந்து மின்னல்ல வடிவாளால் இருதுணியாய் விழவேற்றார்.
| [10] |
அந்நிலையே சிவபெருமான் அன்பர்எதிர் வெளியேநின்று உன்னுடைய கைவாளால் உறுபாசம் அறுத்தகிளை பொன்னுலகின் மேலுலகம் புக்கணையப் புகழோய்நீ இந்நிலைநம் முடன்அணைகஎன் றுஏவியெழுந் தருளினார்.
| [11] |
அத்தனாய் அன்னையாய் ஆருயிராய் அமிர்தாகி முத்தனாம் முதல்வன்தாள் அடைந்துகிளை முதல்தடிந்த கொத்தலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில் பத்தராய்ப் பணிவார்தம் பரிசினையாம் பகருவாம்.
| [12] |
மேவரிய பெருந்தவம் யான் முன்பு விளைத் தன வென்னோ யாவது மோர் பெருளல்லா என் மனத்து மன்றியே நாவலர் காவலர் பெருகு
| [13] |